search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bustle"

    • தஞ்சை மாநகராட்சி சாதாரண மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சாதாரண மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது, கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் 46 கடைகளை திருப்பி கொடுத்து உள்ளார்கள் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மேயர் சண் ராமநாதனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மேயர் சண் ராமநாதன், தீர்மானத்திற்கு நான் கையெழுத்து போட்டுள்ளேன். ஜெயலலிதாவை போல் போலி கையெழுத்து இட வில்லை. அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்றதும், நீங்கள் எப்படி ஜெயலலிதா பற்றி பேசலாம். அவர் முன்னாள் முதலமைச்சர். ஏன் கருணாநிதி மீது கூட வழக்கு இருந்தது என மணிகண்டன் பேசினார்.

    இதனால் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவடையும் நேரத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×