search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buse running"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் காஞ்சீபுரம், திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    காஞ்சீபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. காஞ்சீபுரத்தில் இருந்து அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கின. தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.

    பிரதான காய்கறி சந்தைகளான ராஜாஜி மார்க்கெட் மற்றும் நேரு மார்க்கெட் வழக்கம் போல் திறந்து இருந்தது. அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்கள் ஓடின. அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்கின.

    செங்கல்பட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன. ராஜாஜி சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவள்ளூரில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    அதேபோல் அனைத்து பஸ்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த்தால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இலலை. மாமல்லபுரத்தில் அரசு பேருந்துகள், வேன், ஆட்டோக்கள் இயங்கின. சுற்றுலா பயணிகள் பாதிக்காத வண்ணம் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிற்ப பட்டறைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    பெரியபாளையம் பஸ் நிலையம் நோக்கி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூர்த்தி, சத்தியவேல் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திடீரென பெரியபாளையம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. சந்திரதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    காசிமேட்டு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #PetrolPriceHike
    ×