search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride killed"

    பாளையங்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த 25 நாளில் புதுப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து அருகே உள்ள தென்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது27). இவர் பாளை ஜெயிலில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் வேலம்மாள் (21) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. வேலம்மாள் நர்சிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    இவர்கள் காதலுக்கு பாலகுரு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும் இரு வீட்டாரும் பேசி முடித்து கடந்த 31-ந்தேதி குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைத்து பாலகுருவுக்கும், வேலம்மாளுக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலகுருவுக்கும், வேலம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியவர்கள் சமரசம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்தனர். ஆனாலும் அவ்வப்போது கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பாலகுரு தனது மனைவி வேலம்மாளை திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். தாழையூத்து 4 வழிச்சாலை வழியாக பாளை கே.டி.சி.நகருக்கு வரும் வழியில் கணவன்- மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேலம்மாள் தனது காதல் கணவர், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி அழைத்து செல்கிறார் என்று தெரிந்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார்.

    அப்போது பாலகுரு மோட்டார் சைக்கிளில் தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட முயன்றுள்ளார். வேலம்மாள் உயிர் பிழைக்க நான்கு வழிச்சாலையில் இருந்து கீழே புதர் பகுதியில் இறங்கி ஓடினார். ஆனால் பாலகுரு விரட்டி சென்று வேலம்மாளை சரமாரியாக வெட்டினார். அவரது தலையையும் துண்டித்து படுகொலை செய்தார்.

    பின்னர் தலையை தனியாக எடுத்து ரோட்டின் மறுபுறம் வீசினார். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி பாளை போலீஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.


    நள்ளிரவு நடந்த சம்பவத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வேலம்மாள் உடலை தேடினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரது உடல் கிடந்த இடம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை பாலகுருவை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் தேடினார்கள். அப்போது 4 வழிச்சாலை பொட்டல் பகுதியில் வேலம்மாளின் உடல் ஒரு பக்கமும், தலை மற்றொரு பக்கமும் கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் விரைந்து சென்று வேலம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து ஜெயில் வார்டன் பாலகுருவை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    காதல் திருமணம் செய்த 25 நாளில் புதுப்பெண்ணை அவர் வெட்டி கொலை செய்துள்ளதால் அவர்களுக்குள் என்ன காரணத்தால் தகராறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×