search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boundary stones"

    • பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.
    • மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் நித்ய கால பூஜைகள், திருவிழாக்கள், பராமரிப்பு பணிகள் நிறைவாக நடக்கும் வகையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால் கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் மாயமானது.

    அரசு உத்தரவு அடிப்படையில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து சமய அற நிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நிலங்கள், வணிக மனைகள், வீட்டு மனைகள் குறித்து முழுமையாக ஆவணங்கள் சேகரித்து இணைய தளத்தில் ஏற்றும் பணியும் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,410 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமாக 49 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.கோவில்களுக்கு சொந்தமானது, ஆண்டு குத்தகை,பயன்படுத்தாமல் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் என அனைத்து வகையான நிலங்களையும் அளவீடு செய்து மீட்க வருவாய்த்துறை மற்றும் நில அளவீடு துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அக்குழுவினர் ஒவ்வொரு நிலங்களையும் நவீன உபகரணங்கள் கொண்டு அளவீடு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் நிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை பெயர் பொறித்த தனித்துவமான எல்லை கற்கள் தயாரித்து கோவில்கள் சார்பில் அக்கற்கள் நிலங்களில் நடும் பணியும் துவங்கியுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியிலுள்ள பழமையான கோவில்களுக்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இப்பணி நடந்து வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பழைய ஆவணங்கள் அடிப்படையில் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.தற்போது கோவில் வசம் உள்ள நிலங்கள், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் என அனைத்து நிலங்கள் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு பழைய ஆவணங்கள் அடிப்படையில் கோவில் நிலங்கள் குறித்து கணக்கெடுத்து அதில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இதில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அறநிலையத்துறை சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக அகற்றப்படுகிறது.

    அதே போல் முறைகேடாக பெயர் மாற்றம் செய்திருந்தால் மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக உரிய முறையில் பெயர் மாற்றம் செய்து மீட்கப்படுகிறது. அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு எல்லை கற்கள் மற்றும் சுற்றிலும் கம்பி வேலி பாதுகாப்பு ஏற்படுத்தவும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது உடுமலை, தாராபுரம் பகுதிகளில் ஏறத்தாழ 7,300 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் வசம் உள்ள நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலங்கள் என டிஜிட்டல் சர்வே மேற்கொள்ள நிலங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என அடையாளப்படுத்தும் வகையில் அறநிலையத்துறை என தனித்துவப்படுத்தும் வகையில் எல்லை கற்கள் தயாரிக்கப்பட்டு அவை அனைத்து கோவில் நிலங்களிலும் நடப்பட்டு வருகிறது.கோவில் நிதி நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்டமாக கம்பி வேலி பாதுகாப்பும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×