search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attur 3 dead"

    ஆத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது இலுப்ப நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 60), இவருடைய தாயார் மூக்காயி (80).

    ராமுவிற்கு சங்கீதா என்ற மகளும் சபாபதி, மாரிமுத்து என்ற 2 மகன்களும் இருந்தனர். இதில் சங்கீதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். சபாபதி ராணுவ வீரராக உள்ளார். மாரிமுத்து சேலம் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 5-ந் தேதி ராமுவின் தாய் மூக்காயி வயது மூப்பின் காரணமாக இறந்தார். அவர் இறந்த மறுநாளே ராமும் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் வாடியது. போலீஸ்காரராக பணியாற்றி வந்த மாரிமுத்து தனது பாட்டி இறப்பிற்கு வந்தநிலையில் மறுநாளே தந்தையும் இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த ஒரு வார காலமாக பணி விடுப்பு பெற்று சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் மாரிமுத்து நேற்றிரவு தனது நண்பர்களை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் தெடாவூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்ததால் மாரிமுத்து சாலையோரம் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கெங்கவல்லி போலீசார் மாரிமுத்துவின் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×