என் மலர்
நீங்கள் தேடியது "Asian Olympic Shooting"
- அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது.
- இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள், பிஸ்டல், ஷாட்கன்) டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் தளத்தில் அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.
2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றான இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான 12 ஒதுக்கீடு (கோட்டா) இடங்களை பெற முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (ரைபிள், பிஸ்டல்) போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது. இந்த போட்டியும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகும். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்படும் இலக்கினை எட்டிப்பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கான 8 இடங்களை (கோட்டாவை) கைப்பற்றலாம். இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.
இது குறித்து இந்திய ரைபிள் சங்க பொதுச்செயலாளர் பவன்குமார் சிங் கூறுகையில், 'இரண்டு ஒலிம்பிக் கோட்டா போட்டிகளை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்த ஆண்டு (ஏப்ரல் 21-30) டெல்லியில் நடத்துகிறோம். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியும் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் முக்கிய போட்டிகளை நடத்துவதில் எங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது பிடித்த 22 இடங்களை மிஞ்சி, ஒருநாட்டுக்குரிய அதிகபட்சமான 24 இடங்களை பிடிப்பதே இலக்காக கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் இன்று தொடங்குகிறது. 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இந்த போட்டியில் இந்தியா வென்ற 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
ஜகர்த்தா:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்தை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பட்டீல், மெகுலி கோஷ் இணை 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யுபான்-ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா-ரிதம் சங்வான் கூட்டணி 11-17 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமின் து வின் டிரின்க்-குயாங் ஹூய் பாம் இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
இரண்டாவது நாள் முடிவில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் உள்ளது.






