search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested son"

    தஞ்சை அருகே தொழிலாளியை எரித்து கொன்ற மகன் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள வல்லம் புதூர் கூத்தக்குடி ஏரி வடிகால் பாசன வாரியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரை சோந்தவர்? இறந்து கிடந்தவரின் இடது கை முறிந்திருந்ததால் அவரை யாரோ அடித்து கொலை செய்து உடலை தீவைத்து எரித்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்த போர்வெல் தொழிலாளி அருள்ராஜ் (வயது 55) என தெரிய வந்தது.

    இதையடுத்து அருள் ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதில் அருள்ராஜை அவரது மகன், மருமகன் ஆகியோர் கூலிப்படையுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    அருள்ராஜிக்கும், அவரது மனைவி சின்னம்மாளுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ், மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சின்னம்மாள், சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

    இதுபற்றிய தகவல் அருள்ராஜின் மகன் சியாம் இன்பென்ட்ராஜ் (19), மருமகன் சபரிநாதன் (37) ஆகியோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதனால் சம்பவத்தன்று இரவு அருள்ராஜை நைசாக இருவரும் பேசி வீட்டுக்கு வரவழைத்தனர். பின்னர் அங்கு வைத்து அவரை சரமாரியாக இருவரும் தாக்கினர். மேலும் கூலிப் படையை சேர்ந்த விளார் சேக் அப்துல்லா (26), ரெட்டிபாளையம் கணேசன் (34) ஆகியோரும் அருள் ராஜை தாக்கினர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதில் அருள்ராஜ் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருள்ராஜை உடலை வல்லம் புதூர் கூத்தக்குடி ஏரி வடிகால் பாசன வாரிக்கு கொண்டு சென்று அங்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். பிறகு அங்கிருந்து அவர்கள் 4 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அருள்ராஜை கொலை செய்த அவரது மகன் சியாம் இன்பென்ட்ராஜ், மற்றும் கூலிப்படையை சேர்ந்த சேக் அப்துல்லா, கணேசன் ஆகிய 4 பேரையும் வல்லம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    தொழிலாளியை, அவரது மகன், மருமகன் ஆகியோர் கூலிப்படை உதவியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×