search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anwar Raja MP"

    திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சி தத்தெடுக்கப்பட்டு ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது அன்வர் ராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.
    கீழக்கரை:

    மத்திய அரசின் சன்சத் ஆதார் கிராம யோஜனா திட்டத்தில் கீழ் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டம் தினைக்குளம் ஊராட்சியில் ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜா தலைமையில் நடந்தது.

    திட்ட பொறுப்பு அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். தினைக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் முனியாண்டி, ஒன்றிய ஆணையாளர் ரோஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ, ஜமாத் தலைவர் முகம்மது அலி ஜின்னா,செயலாளர் முகம்மது ரபீக், ஒன்றிய அலுவலக மேலாளர் மலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தினைக்குளம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அன்வர் ராஜா எம்.பி உறுதியளித்தார்.பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

    விழாவில் எம்.பி. அன்வர் ராஜா பேசியதாவது:-

    சன்சத் ஆதார் கிராம யோஜனா திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் ஊராட்சி தத்தெடுக்கப்பட்டு ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பல கிராமங்களுக்கு தாய் கிராமமாக உள்ளதால்இந்த ஊராட்சியை தத்தெடுக்க முடிவு செய்தோம். இதையடுத்து 11 குடிநீர் பணிகள், 9 கட்டிட பணிகள், 16 சாலை பணிகளுக்காகவும் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. ஆகவே எல்லா பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். தினைக்குளத்தில் தேசியமாக்கப்பட்ட வங்கி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018- 2019 நிதியாண்டு வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம், குழுவின் தலைவர், அன்வர்ராஜா எம்.பி. தலைமையில் நடந்தது.

    குழுவின் செயலாளரும், கலெக்டருமான நடராஜன் முன்னிலை வகித்தார். 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018-2019 (தற்போதைய நிதியாண்டில் இது நாள் வரை) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகியவை குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆய்வு செய்தார்.

    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாவட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ள தடுப்பணை கட்டும் பணிகள், நீர்நிலை சீரமைப்பு பணிகள், வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் மற்றும் ஊரக பகுதிகளுக்கான மின்சார விநியோகம் ஆகியவற்றில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு கூடுதல் கவனம் செலுத்தி அதிகாரிகள் சிரத்தையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சிவராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ராஜா, (நிலம்) அமிர்தலிங்கம், (வளர்ச்சி பிரிவு) உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×