search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti plastics"

    ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்-அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். #Edappadipalaniswami
    சென்னை:

    “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட, 1.1.2019 முதல் அமலுக்கு வர உள்ள பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயலாற்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை கொண்ட ஏழு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 23.8.2018 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைத்தார்.

    அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து, கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்து, பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த குறும்படங்களை வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட விளம்பரத்தூதரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன், சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க காசோலைகளையும் வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த பிரச்சார வாகனம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ்நாடு அரசின் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உறுதுணையாக இருக்கும்.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். #Edappadipalaniswami

    ×