search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Devi"

    ‘அக்னி தேவி’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #AgniDevi #BobbySimha
    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’.

    இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா இயக்குனர் மற்றும் படக்குழு மீது பல்வேறு புகார்களை கூறினார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், டூப் வைத்து எடுத்த காட்சிகளை தன் காட்சிகள் என்று படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி வழக்கும் தொடர்ந்தார்.

    மேலும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.பி.ஆர் என்கிற ஜான் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளாக எஸ்.எஸ்.துரைராஜ், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் இன்று கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

    அதில் பாபிசிம்ஹா கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், அவரால் தான் படக்குழு கடுமையாக பாதிக்கப்பட்டது, போலீசார் ஜான் பால்ராஜுக்கு எந்த நெருக்கடியும் தராமல் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AgniDevi #BobbySimha

    அக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. #AgniDevi #BobbySimha
    ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா ஒரு புகார் கூறினார்.

    நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பேசவே இல்லை. எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள்’ என்று கூறினார். படக்குழுவினர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.

    அக்னிதேவி படம் கடந்த வாரம் ரிலீசானது. பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பாபி சிம்ஹா எப்படி எல்லாம் தங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ‘பாபி சிம்ஹா மற்றும் ‘அக்னி தேவி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.



    இதில் எதற்குமே ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறி இருக்கிறார்.

    கூட்டத்தில் பேசிய வி‌ஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    ‘பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால் தயாரிப்பாளருக்கோ ரூ.10 கோடி வரை நஷ்டம். இயக்குனரே கஷ்டப்பட்டு படத்தை தயாரித்து இருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார்.

    எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் உதவி கேட்டார். பேசி தீர்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய வி‌ஷயத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.

    அந்த இயக்குனர் தலைமறைவாகும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? எப்.ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் குற்றம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லிவிட்டார்.

    எதற்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்’.

    இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார். #AgniDevi #BobbySimha #JPR

    அக்னிதேவி பட விவகாரத்தில் என்னை பழிவாங்க நினைக்கிறார்கள் என்று நடிகர் பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். #AgniDevi #BobbySimha
    பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடித்த படம் அக்னிதேவ். படப்பிடிப்பில் இயக்குனர்களுடன் மோதல் ஏற்பட்டதால் படத்தில் இருந்து பாபி சிம்ஹா விலகினார். படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அதையும் மீறி படம் அக்னி தேவி என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது.

    இதை கண்டித்து பாபிசிம்ஹா கூறியதாவது:-

    “எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதாக கூறினர். கதையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லி படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் படப்பிடிப்பில் சம்பந்தம் இல்லாமல் வேறு காட்சிகளை சேர்த்தனர். இயக்குனரின் உறவினர் என்று இன்னொருவரும் வந்து படத்தை இயக்கினார்.



    சங்கத்துக்கு தெரியாமல் டைரக்டரே சண்டை காட்சியை எடுத்தார். இதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதன்பிறகு சில காட்சிகளில் கிராபிக்ஸ் செய்து சேர்த்துள்ளனர். வேறு ஒருவரை எனக்கு டப்பிங் பேச வைத்துள்ளனர். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்த நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டனர். என்னை பழிவாங்க நினைக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு பாபிசிம்ஹா கூறினார்.

    தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ‘பாபிசிம்ஹா நடிக்க மறுத்ததால் பெரிய நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பல முறை அவரை அழைத்தும் படப்பிடிப்புக்கு வரவில்லை. எனவே நஷ்டத்தை தவிர்க்க படத்தை திரைக்கு கொண்டு வந்தோம்’ என்றனர்.
    அக்னி தேவி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை மதுபாலா, திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக கூறியிருக்கிறார். #MadhuBala
    ‘அழகன்’, `ரோஜா’, `இருவர்’, `செங்கோட்டை’, `ஜென்டில்மேன்’, `மிஸ்டர் ரோமியோ’ என 90களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர் மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்‘ படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு `அக்னி தேவி’ படத்தில் நடித்திருக்கிறார்.

    இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் கொடுக்க நினைக்கிறேன்.



    எத்தனையோ நல்ல படங்கள்ல சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கேன். ஆனால் இதுவரை ஒரு விருதுகூட வாங்காதது எனக்கு ஒரு குறையாக இருக்கு. அந்தக் கேள்வி என்னைத் துரத்தினப்போதான், மீண்டும் நடிக்கலாம் என்று களமிறங்கியிருக்கேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பாபி சிம்ஹா, சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்னி தேவி’ படத்தின் விமர்சனம். #AgniDevi #AgniDeviReview #BobbySimha
    போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் பாபி சிம்ஹா. இவரது நண்பர் சதீஷ். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான ரம்யா நம்பீசன், தனது பத்திரிகையாளர் தோழியை வைத்து பாபி சிம்ஹாவின் பேட்டிக்கு ஏற்பாடு செய்கிறார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ரம்யா நம்பீசனின் தோழி வராததால், பாபி சிம்ஹா பேட்டி வேண்டாம் என்று சொல்லுகிறார்.

    அதே நேரத்தில் அந்த தோழி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட செய்தி வருகிறது. இந்த கொலையில் அவருடைய காதலர் சிக்குகிறார். இதை பாபி சிம்ஹா விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் பிடிப்பட்டவர் கொலை செய்யவில்லை என்றும் வேறொரு சிறுவன் தான் கொலை செய்தான் என்பதை அறிந்துக் கொள்கிறார். 



    மேலும் இதுபோல் சிறுவர்களால் ஆங்காங்கே சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் வாதியான மதுபாலா செயல்படுவது பாபிசிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.

    இறுதியில், மதுபாலா அவ்வாறு செய்ய காரணம் என்ன? மதுபாலாவை பாபி சிம்ஹா எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஐ.பி.எஸ். அதிகாரியாக அக்னி தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாபி சிம்ஹா. வழக்கமான போலீஸ் கதாபாத்திரம். துப்பறியும் காட்சிகளிலும் கோபப்படும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.



    அக்னி தேவி என்ற வில்லி அரசியல்வாதியாக மதுபாலா நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் சில உண்மையான அரசியல் தலைவர்களை பிரதிபலிக்கிறது. ஒரு சில இடங்களில் மிகைத்தனமான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

    சதீஷுக்கு பாபியுடனே பயணித்து விசாரணையை கலகலப்பாக்கும் வேடம். எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், ஆகியோர் குணச்சித்திர பாத்திரங்களாக வருகின்றனர். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் இரண்டே காட்சிகளில் வந்து போகிறார்.



    சுவாதி கொலை உள்ளிட்ட சில உண்மை சம்பவங்களை இணைத்து கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. நாவலில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையிலும் இருக்கிறது. ஒரு கலவரத்தால் பலருடைய வாழ்க்கை முறை மாறுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள் ஜேபிஆர், ஷாம் சூர்யா. நடிக, நடிகைகளின் மிகைத்தனமான நடிப்பு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் காதல், பாடல் காட்சிகள் என எந்த வேகத்தடையும் இல்லாமல் பரபரப்பான ஒரு துப்பறியும் படமாக அக்னி தேவி அமைந்துள்ளது.

    ஜனாவின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் இசையும் திகிலை கூட்டுகின்றன. 

    மொத்தத்தில் ‘அக்னி தேவி’ வேகம் குறைவு.
    ஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த புகாரின் பெயரில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளது. #AgniDevi #BobbySimha
    ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, 'அக்னி தேவி' படத்திற்கு தடை கோரியும் பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார்.

    அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன். என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.
     மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.

    இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், 'அக்னி தேவ்' படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.



    பாபி சிம்ஹா அளித்த புகாரின் பேரில், அக்னி தேவி என்ற படத்திற்கும் தனக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், தான் அக்னி தேவ் படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து மோசடியாக தனது முகத்தை வைத்தும், குரல் மாற்றம் செய்தும் டிரைலர் வெளியிட்டது சம்பந்தமாக டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469, &  470) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் 'அக்னி தேவி' படத்திற்கு தடை கோரினார். அதன்பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் 'அக்னி தேவி' படத்தினை வெளியிட 'ஸ்டேட்டஸ்கோ' 20/03/19 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் திருமதி. எம்.கார்த்திகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, மேற்படி படத்தினை வெளியிடுவதில் முன்பிருந்த நிலையே தொடரும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    ஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார் கூறியுள்ளார். #AgniDevi #BobbySimha
    பிரபல நடிகர் பாபிசிம்ஹா. பேட்டை, ஜிகர்தண்டா, நேரம், கருப்பன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னிதேவி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன்.

    என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.

    மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.

    இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.



    மேலும் அதில் நான் நடித்து உள்ளதாக விளம்பரமும் செய்து இருக்கிறார்கள்.

    எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டும், ‘கிராபிக்ஸ்’ செய்தும் படத்தை முடித்து உள்ளனர். இது தொடர்பாக டைரக்டர் ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நந்தம்பாக்கம் போலீசாருக்கு துணை கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AgniDevi #BobbySimha #JPR

    அக்னி தேவி படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் மதுபாலா, தற்போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி அப்படத்தில் பேசியிருக்கிறார். #AgniDevi #AgniDeviTrailer2
    ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. 

    பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இதில் மதுபாலா பேசும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இப்படம் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். #AgniDevi #BobbySimha #RamyaNambeesan #Madhubala
    பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #AgniDevi
    ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. 

    பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதன்படி படம் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். #AgniDevi #BobbySimha #RemyaNambeesan

    ×