search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Banking"

    • நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
    • சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

    'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?

    சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ''சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை'' என்கிறார்.

    பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.

    இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

    கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

    இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

    இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    * வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

    அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

    * வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

    * நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

    * கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

    * கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

    சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

    சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

    'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

    புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

    சைபர் கிரைமில் பணியாற்றிய போலீஸ் துணை கமிஷனர் (தலைமை அலுவலகம்) எஸ்.ஆர்.செந்தில்குமார்:- சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, சுயவிவரங்கள் அடங்கிய 'புரோபைல்', பகிரும் தகவல்களை நம்பிக்கையானவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் 'லாக்' செய்து வைக்க வேண்டும். சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடம் பழகும்போதும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்.

    சமூக ஊடக கணக்குகளை முடக்கி, அதில் தொடர்பில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புமாறு தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். உள்பட வெவ்வேறு ஊடகங்களின் மூலமாக தங்களுடைய தொடர்புகளுக்கு, யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் 'ஓ.டி.பி'. கேட்பது இல்லை. எனவே எந்த காரணத்தை கொண்டும் 'ஓ.டி.பி.'யை யாரும் பகிரக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.

    பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி?

    * இணையதள வங்கி பரிவர்த்தனைகளுக்காக தரமான மற்றும் 'லைசென்ஸ்' பெற்ற 'ஆபரேட்டிங் சிஸ்டத்தை' பயன்படுத்தவேண்டும்.

    * தகவல்களை உள்ளீடு செய்வதற்கு முன்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் 'யூ.ஆர்.எல்.'களை பரிசோதிக்கவேண்டும்.

    * பொதுவாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

    * இ-மெயில், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் 'பாஸ்வேர்டு'களை தேர்வு செய்யவேண்டும்.

    உங்களுக்கு தெரியுமா?

    இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 139 கோடி. இவர்களில் சுமார் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் நடப்பாண்டு முதல் காலாண்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 198 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2-வது காலாண்டில் 15.3 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 37 ஆயிரத்து 658 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவாகிய சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 748 மட்டும்தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 707 ஆகும்.

    சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் தப்பிக்கும் என்பதே நிதர்சனம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    • மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது அனைத்து விவரங்களையும் திருடி விடும்.
    • இந்திய இணையவெளியில் ‘சோவா’ வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது.

    புதுடெல்லி :

    நாட்டில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.

    செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'சோவா' என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடக்கூடியது.

    முதலில், அமெரிக்கா, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளை அந்த வைரஸ் குறிவைத்தது. கடந்த ஜூலை மாதம், இந்தியா உள்பட பல நாடுகளை தனது இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது.

    அந்த வைரசை உருவாக்கியவர்கள், தற்போது அதன் 5-வது தலைமுறையை உருவாக்கி விட்டனர். இந்த வைரஸ், குரோம், அமேசான் போன்ற சட்டப்பூர்வ செயலிகளின் சின்னத்தை காட்டும் போலி ஆன்ட்ராய்டு செயலிகளுக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும். அந்த செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படி ஏமாற்றும்.

    போலி ஆன்ட்ராய்டு செயலிகளை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்தவுடன், அந்த போனில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகளின் விவரங்களை வைரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வருக்கு தெரிவிக்கும்.

    அதன்மூலம், குறிவைக்கப்படும் செயலிகள் தேர்வு செய்யப்படும். அந்த செயலிகளின் முகவரிகளை 'சோவா' வைரசுக்கு சர்வர் தெரிவிக்கும். அவை 'எக்ஸ்.எம்.எல்.' பைலில் சேமிக்கப்படும். குறிவைக்கப்பட்ட செயலிகள் பற்றி வைரசுக்கும், சர்வருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடைபெறும்.

    'சோவா' வைரஸ், மொபைல் பேங்கிங் செயலிகள், பணம் செலுத்தும் செயலிகள், கிரிப்டோகரன்சி செயலிகள் என 200-க்கு மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது. அந்த செயலிகளுக்கு மேலே ஒரு அடுக்கை உருவாக்கி, ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களை ஏமாற்றக்கூடியது.

    மொபைல் பேங்கிங் செயலியை வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது, யூசர்நேம், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் திருடி விடும். இது, வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருடு போவதற்கு வழி வகுக்கும். இந்திய இணையவெளியில் 'சோவா' வைரஸ் உலவி, இந்திய வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்துள்ளது.

    இந்த வைரஸ், ஆன்ட்ராய்டு போனுக்குள் ஊடுருவி, அதை முடக்கி விடக்கூடியது. 'செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று வைரசை நீக்குவதும் கடினம். நீக்கினாலும், 'இந்த செயலி பாதுகாப்பானது' என்ற செய்தியுடன் திரும்ப வந்து விடும்.

    எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். முறையான 'ஆப் ஸ்டோர்' மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலிகளின் விவரங்களை படித்து பார்க்க வேண்டும். அவ்வப்போது 'அப்டேட்' செய்ய வேண்டும். செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை அளிக்கக்கூடாது.

    நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய 'லிங்க்'குகளை திறக்கக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×