search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "249 acres of"

    • தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

    ஈரோடு வட்டாரம் மேட்டுநாசுவன்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத்தொகுப்பில், புதர்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

    தமிழக அரசால் வரும் 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும், ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட வேளாண் துறையின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 60 கிராம ஊராட்சிகளும், 2022-23-ம் ஆண்டு 44 கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதார துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மற்றும் எரிசக்தி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி களாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2021-22-ம் ஆண்டு 31 தரிசு நிலத்தொகுப்புகளில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 11 கிராம பஞ்சாயத்துகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு 9 இடங்களில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கபட்டுள்ளது.

    2022-23-ம் ஆண்டு 20 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 13 இடங்களில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இவ்வாறான தொகுப்பு களில் முட்செடிகள் மற்றும் புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாக தரிசு நிலங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.

    பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தரிசு நில தொகுப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் படுகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் நிலையான வருமானம் தரக்கூடிய பழப்பயிர்கள், காய்கறி தோட்டம் மற்றும் மரவகைப் பயிர்கள் தொகுப்பு விவசா யிகளின் பங்கேற்புடன் சாகுபடி செய்ய ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் பொறியியல் துறை மூலம் 10 எச்.பி மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் இறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவையல்லாது கலைஞரின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிராக உளுந்து சாகுபடிக்கு மானியம், கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், தார்பாலின் ஆகியவையும், தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டு தோட்டம் அமைக்க தளைகள் விநியோகம் நெகிழி கூடைகள், பழச்செடிகள் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 100 சத மானியத்தில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் மண் வரப்புகள், கல் வரப்புகள் அமைத்தல் போன்ற நீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2021-22-ம் ஆண்டு ரூ.425.5 லட்சம், 2022-23-ம் ஆண்டு ரூ.97.40 லட்சம் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தொகுப்புகளில் மொத்தம் 1,187 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, சென்னிமலை வேளாண்மை துணை இயக்குநர் சாமுவேல், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×