search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 districts"

    திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. #Groundwater
    சென்னை:

    தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை.

    கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 4.32 மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுள்ளது.

    அங்கு 2017-ம் ஆண்டு 6.74 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கின்படி 11.06 மீட்டரில் நிலத்தடி நீர் சென்று விட்டது.

    இதேபோல் திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னையில் வடகிழக்கு பருவமழை 55 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருக்கவே வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அம்மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு 15.59 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.34 மீட்டராக உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.25 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக தெற்காசிய நீர் ஆய்வு ஒழுங்கு முறை கூட்டமைப்பு தலைவர் கனகராஜன் கூறியதாவது:-

    நிலத்தடி நீர் மட்டம் உயராததற்கு பருவமழை சரியாக பெய்யாதது காரணமல்ல. நாம் நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 80 சதவீதம் மழை தண்ணீர் நிலத்தடிக்கு செல்லாமல் நிலத்திலேயே சென்று விடுகிறது.



    நீர் நிலைகளில் மழை தண்ணீரை சேமிக்காத வரை நிலத்தடி நீர்மட்டம் உயராது. நமது நீர் நிலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

    இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வறண்டு பாலைவனமாகும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Groundwater

    ×