search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 MLAs"

    11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #MLADisqualify

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம் மயிலை பகுதி தி.மு.க. பிரமுகர் வில்லவன் இல்லத் திருமண விழா நுங்கம்பாக்கத்தில் நடந்தது. மணமக்கள் கதிரவன்- புனிதா திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    இங்கு நடைபெற்ற திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணங்களுக்கு 1967-ம் ஆண்டுக்கு முன்பு சட்டப்படி அங்கீகாரம் கிடைக்காத நிலை இருந்தது.

    1967-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றது. அப்போது முதல்- அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றதும், சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி தந்தார்.

    அந்த வகையில் இந்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்துடன் நடந்துள்ளது. எனவே நமக்கு தெரிந்த, புரிந்த, நாம் அறிந்த, நமது தாய்மொழியான தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்துள்ளது.

    அப்படிப்பட்ட அழகு தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு தமிழை எப்படியாவது திட்டமிட்டு, இந்திமொழியை, சமஸ்கிருதம் மொழியை கொண்டு வந்து திணித்து அதன்மூலம் தமிழுக்கு ஒரு ஆபத்து ஏற்படுத்துகிற நிலையில் மத்தியில் உள்ள மோடி ஆட்சி ஈடுபட்டு வருகிறது. அதை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழ் பெயர்களை சூட்டுகிற அந்த சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அது முடிந்ததும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்று இங்கு பேசினார்கள்.

    எனக்கு ஒரு சந்தேகம், பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் வந்துவிடும் என தெரிகிறது. காரணம் இன்று தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது.

    2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.

    இதை சொன்னால் நான் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்க போகிறது.

    உங்கள் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவா காண வேண்டும்? கனவெல்லாம் காண வேண்டிய அவசியமே கிடையாது. நினைவாகத்தான் உருவாக்கப் போகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். #MKStalin #MLADisqualify

    ×