என் மலர்tooltip icon

    வழிபாடு

    weekly rasipalan 15.3.2026 to 21.3.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 15.3.2026 to 21.3.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • மேஷம் வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம்.
    • கடகம் சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம்.

    மேஷம்

    வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம். வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அதிர்ஷ்டமும் நிம்மதியும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பெருகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள்.

    திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் சகாயமான பலன்கள் உண்டு. தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். இழந்த அரசுப் பணி மீண்டும் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவார்கள். உயர் கல்வியில் நிலவிய மந்த நிலைமாறும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள். அமாவாசை அன்று தயிர்சாதம் தானம் வழங்கவும்.

    ரிஷபம்

    நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் சனி சேர்க்கை உள்ளது. தன, லாப ஸ்தானம் பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறைந்த முயற்சியில் நிறைவான வருமானம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

    முதலீட்டாளர்களுக்கு அரசு வழியில் மானியங்கள், உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வாழ்க்கைத் துணைக்கு கவுரவமான வேலை கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். அமாவாசை அன்று கோ பூஜை செய்யவும்.

    மிதுனம்

    உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படும் வாரம். ராசியில் ஜென்ம குருவாக வக்கிரகதியில் நின்று பலன் கொடுத்த குரு பகவான் வக்ர நிவர்த்தி பெற்று முழு பலனையும் கொடுக்க உள்ளார். ஆன்ம பலம் பெருகும். நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும்.

    இந்த காலகட்டத்தில் எந்த விதமான கடனுக்கு முயற்சி செய்தாலும் நிச்சயம் கைகூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். பங்குச் சந்தை ஆதாயம் பெருகும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பல வருடங்களாக தடைபட்ட திருமணம், பேசி நிச்சயித்து நின்று போன திருமணங்களும் நன்றாக நடைபெறும். 16.3.2026 அன்று மாலை 6.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கடன், ஜாமீன் போன்ற விசயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.

    கடகம்

    சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 6,9-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். திருமண முயற்சிகள் வெற்றி தரும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும். தொழில், உத்தியோகத்தில் திட்டமிட்டு வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழிலாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அடமானத்திலிருக்கும் வீட்டை, நகையை மீட்க தேவையான பண உதவி கிடைக்கும்.

    பெண்களுக்கு புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். 16.3.2026 அன்று மாலை 6.14 முதல் 18.3.2026 அன்று இரவு 11.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசியமற்ற வம்பு, வழக்கை தவிர்த்தல் நலம். அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடவும்.

    சிம்மம்

    இழந்த இன்பம் மீண்டும் கிடைக்கும் வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் வக்கிர நிவர்த்தி பெறுவதால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். எந்த நன்மையை எழுதுவது, எந்த நன்மையை விடுவது என்றே தெரியவில்லை. எனவே அஷ்டமச் சனியை நினைத்து பயப்படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    சிலரின் மேல் இருந்த வீண் பழி விலகும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும். 18.3.2026 அன்று இரவு 11.36 முதல் 21.3.2026 அன்று காலை 2.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற சிறிய உடல் உபாதைகள் இருக்கும். சிலருக்கு எதிர் கால நன்மைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் எண்ணம் மேலோங்கும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    கன்னி

    நினைத்தது நடக்கும் வாரம். வார இறுதியில் ராசிக்கு ஆறில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் அகலும்.

    கண் மறைவாக இருந்த, காணாமல் போன நகைகள் மீண்டும் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். மாமனார் மூலம் திரளான சொத்துகள் அல்லது பணம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி பலிதமாகும். பூர்வீக குலத்தொழிலில் புதிய பங்குதாரர் இணையலாம். பழைய பங்குதாரர் விலகலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். 21.3.2026 அன்று 2.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அமாவாசை அன்று விஷ்ணு சஹஸ்கர நாமம் படிக்கவும்.

    துலாம்

    நன்மைகள் நடக்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரம் நிவர்த்தி அடைந்ததால் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் வந்து சேரும். எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், கவுரவம் யாவும் உயரும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும்.

    பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. கடந்தகால வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுபச் செலவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை இனி இல்லை. அமாவாசை அன்று சுமங்கலி பெண்களுக்கு இயன்ற தான தர்மம் வழங்கவும்.

    விருச்சிகம்

    அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. இதனால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் யோகமும் உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாகி வாழ்க்கைத்தரம் உயரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில், உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமாகும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். வீடு, வாகனம் முயற்சிகள் கைகூடும். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.தாய் தந்தை, உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பெண்களுக்கு புதிய தொழில் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். அமாவாசை அன்று முருகன் கோவிலில் அன்னதானம் வழங்கவும்.

    தனுசு

    மன நிறைவான வாரம். ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. எதிர்காலம் குறித்த தெளிவு பிறக்கும். முன்னேற்ற பாதை தென்படும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும். ஒரு சிலருக்கு இழந்த பதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும்.

    சிலருக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷனால் ஆரோக்கிய குறைபாடு, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களின் மனதை புண்படாமல் பேசி குடும்ப பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சில குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும்.அமாவாசை அன்று அந்தணர்களுக்கு தான தர்மங்கள் வழங்கவும்.

    மகரம்

    சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. வாடகை வருமானம் தரக்கூடிய புதிய சொத்துக்கள் சேரும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்கள் விற்று முழுப் பணமும் வீடு வந்து சேரும். சகோதரிகளுடன் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தலாம். தொழில் மூலம் புகழ், வெற்றி, லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்றமும், மேன்மையும் உண்டாகும்.

    அதற்கு தேவையான தொழில் கடனும் கிடைக்கும். சகோதர, தம்பதிகளுக்குள் உறவி னர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலில் சிறு மனக் கசப்பு தோன்றலாம். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். திருமண வயதினருக்கு சாதகமான வரன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி பதவி, ஊதிய உயர்வுடன் கிடைக்கும். சிலருக்கு பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உள்ளது. அமாவாசை அன்று உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவவும்.

    கும்பம்

    புண்ணியபலன்கள் அதிகரிக்கும் வாரம். ராசியில் உள்ள செவ்வாய் புதன் ராகுவிற்கு குரு பார்வை உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறுகிறது. பொருளாதார நிலைமை மேம்படும். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். தோல்வி மனப்பான்மை விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பதவியில் நிலவிய அவப்பெயர்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவியில் அமரும் பாக்கியமுண்டு. பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும். காதல் திருமண முயற்சி சித்திக்கும்.

    சிலருக்கு மறுமணம் நடக்கும். கடன் பிரச்சினையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உடல் பாதிப்புகள் அகலும். சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை தவணை முறையில் வாங்குவீர்கள். திருமணமானஇளம் பெண்களுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்புள்ளது. அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் நல்லாசி பெறவும்.

    மீனம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம் ராசியில் சூரியன் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. அதாவது ராசியில் விரய அதிபதி சனிபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆறாம் அதிபதி சூரியன் உள்ளார்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஆர்வம் குறைத்து ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ஏலத்திற்கு போகவிருந்த பூர்வீகச் சொத்து சித்தப்பாவின் முயற்சியால் காப்பாற்றப்படும்.

    அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. கை, கால், மூட்டு வலியால் அசதி உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை ஒத்திவைக்கவும். சில தம்பதிகளிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சிலருக்கு வாரிசு அடிப்படையிலான தந்தையின் அரசு வேலை கிடைக்கும். தேர்வு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் அதிகரிக்கும். அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×