என் மலர்tooltip icon

    வழிபாடு

    கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை
    X

    கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை

    • கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
    • கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.

    கிரிவலம் செல்லும்போது பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் வருமாறு:-

    குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.

    நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.

    ஆண்கள் வேட்டி, துண்டு அணிந்து கொண்டு வலம் வரலாம். பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் வைத்து வலம் வர வேண்டும்.

    மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.

    கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.

    போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.

    தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.

    யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.

    கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.

    கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை வைத்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.

    பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம்.

    Next Story
    ×