என் மலர்
புதுச்சேரி

வீடுகளில் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் பேட்டரிகளை திருடிய வாலிபரையும் அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
சொகுசு காரில் வந்து வீடுகளில் கியாஸ் சிலிண்டர் திருடிய மளிகை கடைக்காரர்
- தொடர் திருட்டு குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- செல்வகுமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர்பேட்டை, முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன்(வயது38). கடந்த 29-ந் தேதி இவரது வீட்டில் பொருத்தியிருந்த இன்வெர்ட்டர், 3 பேட்டரிகள் திருடுபோனது.
இதேபோல் இவரது வீட்டின் அருகில் உள்ள விசுவநாதன் நகர், திருநாவுக்கரசு வீதியில் உள்ள சரவணன் வீட்டில் 2 இன்வெர்ட்டர், பேட்டரியும், கருணாநிதி வீட்டில் 3 கியாஸ் சிலிண்டர்கள் திருடுபோனது.
தொடர் திருட்டு குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் திருட்டு நடைபெற்ற வீடுகளில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் சொகுசு காரில் வந்த மர்மநபர் பேட்டரி மற்றும் கியாஸ் சிலிண்டர்களை திருடிச் செல்வது தெரியவந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது புதுவை பாகூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் அறிவு என்ற செல்வக்குமார் (30) என்பதும், இரவு நேரத்தில் காரில் வலம் வந்து, வீட்டிற்குள் புகுந்து பேட்டரி, கியாஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து செல்வகுமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் பேட்டரிகளை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டார்.
கைது செய்யப்பட்ட செல்வக்குமாரிடம் இருந்து 3 கியாஸ் சிலிண்டர்கள், 5 பேட்டரிகள், 3 இன்வெர்ட்டர்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.






