என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு 2-ந்தேதி புதுவை வருகை
    X

    பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு 2-ந்தேதி புதுவை வருகை

    • பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுவைக்கு வருகிறார்.
    • டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வருகிறார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்கின்றனர்.

    புதுச்சேரி:

    இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது.

    பா.ஜனதா - கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுவைக்கு வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வருகிறார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து அங்கிருந்து ஓட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அங்கு பா.ஜனதா கூட்டணி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெற உள்ள கூட்டத்திலும் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    இந்த தகவலை புதுவை மாநில ஆதரவு திரட்டுகிறார் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரையும், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக தலித் சமூகத்தை சேர்ந்தவரையும் பா. ஜனதா தேர்வு செய்தது. தற்போது எளிய குடும்பத்தில் பிறந்த அரசியல் பின்புலம் இல்லாத திரவுபதி முர்மு பா. ஜனதா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம் என்ற பிரதமரின் லட்சியத்தை உறுதிபடுத்தும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி அணியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் பா. ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க.வினர் தங்களை சந்திக்கவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார்.

    மலைவாழ்சமூகத்தை சேர்ந்த திரவுபதிமுர்முவை ஆதரிக்காததால் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச தகுதியில்லை.

    நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டில் முதல்முறையாக மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளார். பா.ஜனதா வேட்பாளர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு புதுவைக்கு வர உள்ளார்.

    ஓட்டல் அக்கார்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது.

    கூட்டத்தில் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திரவுபதி முர்மு வருகை புதுவைக்கு வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×