என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஐயப்ப சாமி விக்ரகத்தை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வந்த போது எடுத்த படம்.
    X
    ஐயப்ப சாமி விக்ரகத்தை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வந்த போது எடுத்த படம்.

    எருமேலியில் ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல்

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு அம்பலப்புழை, ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் வண்ண பொடிகளை உடலில் பூசிக்கொண்டு திரளானவர்கள் பங்கேற்றனர்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திரளாக இருமுடி சுமந்து வந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு சங்கத்தின் சார்பில் சிறப்பு வாய்ந்த பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடைபெறுவது வழக்கம். ஐயப்பன் முன்னிலையில் பக்தர்கள் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்த நிகழ்வு நடக்கிறது.

    அதாவது சிறியவர்- பெரியவர், ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னி ஐயப்ப பக்தர்கள் உள்பட அனைவரும் தங்களது முகம் உள்பட உடல் முழுவதும் வண்ண வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, இலை-தழைகளை கையில் ஏந்தியவாறு ஐய்யனின் சரண கோஷத்தை முழங்கிபடி, ஆடி பாடுவார்கள்.

    அவர்கள் எருமேலி கொச்சம்பலத்தில் இருந்து வாவர் கோவில் தரிசனத்திற்கு செல்வார்கள். அதன்பின், தர்மசாஸ்தா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் நடத்தி விட்டு அவர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று நடைபெற்றது. இரவு சாமி ஐயப்பனின் பரம்பரை பெருவழி பாதையில் பக்தர்கள் குழுவினர் சபரிமலைநோக்கி தங்களது புனித பயணத்தை தொடங்குவார்கள். பேரூர் தோடு, காளை கட்டி அழுதாமலை, கரிமலை வழியாக 2 நாட்கள் நடந்து நாளை (வியாழக்கிழமை) பெரியானை வட்டம் வழியாக அவர்கள் பம்பை ஆற்றங்கரை சென்று அங்கு முகாமிடுவார்கள்.

    பின்னர் அம்பலப்புழை, ஆலங்காடு பக்தர் குழுவினர் சபரிமலை பயணத்தை தொடங்குவார்கள். தொடர்ந்து 18-ம் படிஏறி சாமி தரிசனம் செய்த பிறகு அவர்கள் அனைவரும் சபரி மலையில் முகாமிட்டு, இரவு ஓய்வு எடுப்பார்கள். மறு நாள் மகரஜோதி தினத்தில் சாமி ஐயப்பனுக்கு அம்பலப் புழை பக்தர் குழுவினர் சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய் அபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
    Next Story
    ×