என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். (உள்படம் : சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகன்)
    X
    தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். (உள்படம் : சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகன்)

    இன்று கோலாகலமாக நடந்தது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருப்பரங்குன்றம் :

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சே‌ஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப் பெருமான்-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சொக்கநாதர் - மீனாட்சி அம்மன் கலந்துகொண்டு முருகப்பெருமான் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

    இரவு மீனாட்சி அம்மன்- பிரியாவிடையுடன் சொக்கநாதர் வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருக பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன்-தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

    அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார்.

    இந்த தேரோட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×