search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று காலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது, பெரிய பெருமாள், அதனைத் தொடர்ந்து ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர்.

    108 திவ்யதேசங்களில் முக்கியமான தலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. இங்கு ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.

    இன்று நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி ராபத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், மற்றும் பெரியபெருமாள் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.

    காலை 7.05 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது, பெரிய பெருமாள், அதனைத் தொடர்ந்து ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர்.

    முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பக்தர்களும் கோவிந்தா.. கோபாலா.. என்ற கோ‌ஷங்கள் முழங்க பின் தொடர்ந்து வந்தனர்.

    அப்பொழுது சொர்க்க வாசல் எதிரே பெரியாழ்வார், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், வேதாந்த தேசிகர், ஆகியோர் எதிர் கொண்டு சேவித்து மங்களா சாசனம் செய்யும் வைபவம் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து சுவாமிகள் ராபத்து மண்டபம் வந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ‘சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா, முன்னாள் மாவட்ட கவுன் சிலர் முத்தையா இணை ஆணையர் செந்தில் வேலவன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மிகவும் பழமையான வெங்கடாச லபதி கோவில் உள்ளது. இந்த கோவில் முழுமையும் பாறைக் கற்களால் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த திருத்தலம் 500 ஆண்டுகள் பழமையானது.

    வெங்கடாசலபதி, ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் இங்குள்ள சாஸ்தா கோவிலில் அருள்பாலிப்பதாலும் ஊரின் முக்கிய தெய்வம் என்பதாலும் இந்த தலம் ஊரின் பெயரிலேயே சாத்தூரப்பன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    சாத்தூர் பெருமாள் கோவிலில் இன்று காலை 7.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் பூதேவி,ஸ்ரீதேவி சமேதமாக சிறப்பு அலங்காரத்தில், நான்கு மாடவீதிகளைச் சுற்றி வந்து, சொர்க்க வாசல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    சொர்க்கவாசல் திறப்பை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுமதி, நிர்வாக அதிகாரி சுந்தரராசு செய்திருந்தனர்.

    Next Story
    ×