search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்
    X
    இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்

    கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மகிழ்ச்சி

    அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று பர்மிங்காமில் நடந்த 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக ஸ்மித் 85 ரன் எடுத்தார். அலெக்ஸ் கேரி 46 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 29 ரன்னும், மேக்ஸ்வெல் 22 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ்,  ரஷித் தலா 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியில் ஜேசன் ராய் 85 ரன்னும், ஜோ ரூட் 49 ரன்னும், கேப்டன் மோர்கன் 45 ரன்னும் எடுத்தனர்.

    1992-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது.

    இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

    இந்த வெற்றி முற்றிலும் மகிழ்ச்சி அளிக்கிறது. நம்ப முடியாத அளவுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

    எட்ஜ்பாஸ்டன் மைதானம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தினோம். உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த நம்பிக்கையுடனும், லீக் ஆட்டங்களில் கிடைத்த உத்வேகத்துடனும் இங்கு வந்து விளையாடினோம்.

    முன்னேற்றத்தில் இருந்து முன்னேற்றம் அடைவது பற்றி பேசினோம். முதல் பந்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தோம்.

    கிறிஸ் லோக்ஸ் அருமையாக பந்து வீசினார். அவர் முதல் 10 ஓவரில் சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார். அதேபோல் ஆர்சர், மற்ற பந்து வீச்சாளர்களும் திறமையுடன் செயல்பட்டு ஆட்டத்தில் எங்களை முன்னிலையிலேயே வைத்து இருந்தனர்.

    ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் தொடக்கத்திலேயே ரன்களை குவித்தனர். அவர்களது வாழ்க்கையில் தற்போது உச்சக்கட்ட பார்மில் உள்ளனர். அவர்கள் சிறந்த நிலையிலேயே இருந்தால் அது எங்களுக்கு பலமாக அமையும்.

    இங்கிலாந்து அணி 1992-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடியபோது எனக்கு 6 வயது. இதனால் இறுதிப் போட்டி பற்றி அதிகம் ஞாபகம் இல்லை. நிறைய தடவை அந்த போட்டியின் ஹைலைட்சை பார்த்து இருக்கிறேன்.

    மோர்கன்

    இறுதிப் போட்டியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறினோம். அதில் இருந்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். இது வியத்தகு முன்னேற்றம் ஆகும்.

    டிரஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் கடின உழைப்பில் பஙகு உள்ளது. கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதுபோன்ற பல வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×