என் மலர்
உலகம்

'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து ஐநா நிபுணர் குழு அறிக்கை!
- இது ஒரு உலகளாவிய குற்றவியல் அமைப்பாக செயல்பட்டதைக் காட்டுகிறது
- எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள், 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக' கருதப்பட வேண்டும் என ஐநா நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளை ஆய்வு செய்த ஐநா நிபுணர்கள், இது ஒரு உலகளாவிய குற்றவியல் அமைப்பாக
செயல்பட்டதைக் காட்டுவதாகவும், இதில் இடம்பெற்றுள்ள பாலியல் அடிமைத்தனம், கடத்தல், வன்கொடுமைகள் கடுமையான குற்றங்களின் கீழ் வருவதாகவும் கூறியுள்ளனர்.
எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும், அனைவர் மீதும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஐநா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.






