நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அளித்த உதவியை தலிபான் அரசு ஏற்க மறுப்பு

சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அளித்த உதவியை தலிபான் அரசு ஏற்க மறுப்பு
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். அங்கு மீட்புப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.

பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்து உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக்கக்கர் அத்தியாவசிய உதவிகளுடன் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் காபூல் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தா னுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து இரு நாட்டு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம்தான் பாகிஸ்தானின் உதவியை தலிபான் அரசு நிராகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.

சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்துவது, ஆப்கானியர்களுக்கான விசா கொள்கை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com