என் மலர்
உலகம்

அணு ஆயுதம் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு: பாகிஸ்தான் விமர்சனம்
- பாகிஸ்தான் அணுஆயுதம் குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மேற்பார்வையிட வேண்டும்- ராஜ்நாத் சிங்.
- பாகிஸ்தானின் திறம்பட்ட பாதுகாப்பின் விரக்தியில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தை தெரிவித்துள்ளார்- பாகிஸ்தான்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலடியும் கொடுத்தது.
பின்னர் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடரந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்குள்ள பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தார். அப்போது மோசமான நாட்டில் அணுஆயுதம் பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் பாகிஸ்தானின் அணுஆயுதங்களை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மேற்பார்வையிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்தை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் ஷஃப்காத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாகிஸ்தானின் திறம்பட்ட பாதுகாப்பின் விரக்தியில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுயமாக கூறும் "அணுஆயுத மிரட்டல்" இல்லாமலேயே, அவர்களை தடுப்பதற்கான போதுமான திறன் பாகிஸ்தானிடம் உள்ளது. அணு ஆயுதம் குறித்த கருத்து, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி உள்ளிட்ட ஐ.நா. சிறப்பு அமைப்புகளின் ஆணை மற்றும் பொறுப்புகள் பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.






