என் மலர்
உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
- இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
- ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
Live Updates
- 15 Oct 2023 11:58 AM IST
ஹமாஸ் அமைப்பின் மற்றொரு கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை இன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டது நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா என தெரிவித்துள்ளது.
- 15 Oct 2023 11:36 AM IST
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஏராளமான அமெரிக்கர்கள் வெள்ளை மாளிகை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 15 Oct 2023 10:18 AM IST
காசாவிலிருந்து தப்பி ஓட முயலும் பொதுமக்களை வெளியேற வேண்டாம் என ஹமாஸ் அமைப்பினர் தடுத்து வருகின்றனர் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
- 15 Oct 2023 9:49 AM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பாலஸ்தீனிய அதிபர் மஹமவுத் அப்பாஸ் தொலைபேசியில் உரையாடினார். அப்போது காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களைத் திறப்பது, மருந்துகள், தண்ணீர், மின்சாரம், எரிபொருளை காசாவிற்குள் அனுமதிப்பது குறித்து வலியுறுத்தினார்.
- 15 Oct 2023 8:55 AM IST
இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
- 15 Oct 2023 8:16 AM IST
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 274 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 4வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- 15 Oct 2023 7:33 AM IST
காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 15 Oct 2023 7:00 AM IST
இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் 4-வது விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
- 15 Oct 2023 6:58 AM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- 15 Oct 2023 5:38 AM IST
இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.






