என் மலர்
உலகம்

#IranWar | போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான் - ஈரான் பதிலடி!
- அமெரிக்க ராணுவத் தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல்.
- உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.
அணு ஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடும் தாக்குதல்கள் காரணமாக உலக அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
போர் முடிவுக்கு வருவது குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடுமையாக பதலளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான். இந்த பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன, அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டோரல் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "நான் விரைவில், மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் பட்சத்தில் அவர்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். நாம் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம், அவர்கள் ஏதாவது செய்தால் கூட, அவர்களாலோ அல்லது அவர்களுக்கு உதவும் வேறு யாராலோ உலகின் அந்தப் பகுதியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.," என்று கூறினார்.






