என் மலர்
உலகம்

வரும் 19-ம் தேதி சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம்
- ஆக்சியம்-4 திட்டம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
- தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 11-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
பால்கன்-9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவை ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விஞ்ஞானிகள் சரிசெய்ததாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது. இதனால் சுபான்ஷு சுக்லா பயணம் மேற்கொள்ளும் விண்கலம் வரும் 19-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.