search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பஞ்சாப் தேர்தலில் தோல்வி: பொதுமக்கள் போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு
    X

    பஞ்சாப் தேர்தலில் தோல்வி: பொதுமக்கள் போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு

    • இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார்.
    • ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையில்,பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 20 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான்கானின் '(பிடிஐ)பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சி' அதிக இடங்களை கைப்பற்றி 15 இடங்களில் வெற்றிபெற்றது. நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (பிஎம்எல்-என்) - நவாஸ் கட்சி 4 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

    பிடிஐ மற்றும் பிஎம்எல்-கியூ கட்சிகளின் பொது வேட்பாளர் பர்வைஸ் இலாஹி 186 வாக்குகளையும், எதிர்த்து களமிறங்கிய பிஎம்எல்-என் கட்சியின் ஹம்சா ஷாபாஸ் 179 வாக்குகளையும் பெற்றனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பிஎம்எல்-கியூ கட்சி வாக்குகள் பஞ்சாப் சட்டமன்ற துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

    ஆகவே குறைந்த வாக்குகள் பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஹம்சா ஷாபாஸ் மீண்டும் பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

    பஞ்சாப் முதல்-மந்திரி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பஞ்சாபில் முழுமையான கேலிக்கூத்து இது. ஆனால் ஆட்சியில் நீடிக்க எந்த எல்லைக்கும் செல்லும் இந்த ஊழல் அரசிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

    இன்று இவ்வாறு நடப்பதால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும். இன்று என் தேசம் இந்த செயலுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அனைவரின் பார்வையும் சுப்ரீம் கோர்ட்டின் மீது உள்ளது, அரசியல் பிரிவு 63 தெளிவாக உள்ளது" என்றார்.

    பஞ்சாப் சட்டசபையில் பெரும்பான்மையானவர்களின் வாக்குரிமையை, சட்ட விரோதமாக அரசு தடுத்ததை எதிர்த்து நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×