என் மலர்
உலகம்

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.களான 43 பேர் மீது கொலை குற்றச்சாட்டு!
- 79 பேரில், 4 சிறுபான்மையினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
- 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாணவர்கள் போராட்டத்தால் 2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை வங்கதேசத்தின் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் உள்ள 297 இடங்களில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியான பிஎன்பி, 212 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
எதிர்த்து போட்டியிட்ட ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. 79 சிறுபான்மையின வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் 43 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் 185 எம்பிக்கள் கடந்த காலங்களில் வழக்கு சந்தித்தவர்கள் எனவும், 95 எம்பிக்கள் மீது கடந்த காலத்திலும் தற்போதும் வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிஎன்பி கட்சியின் எம்பிக்களில் 50.24% பேர் மீது வழக்குகள் உள்ளன. இரண்டாவது பெரிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்பிக்கள் 47.07% மீது வழக்குகள் உள்ளன.
எம்பிக்களில் 182 பேர் தொழிலதிபர்கள். இதற்கு அடுத்தபடியாக 36 பேர் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் 22 பேர், விவசாயிகள் 13 பேர் உள்ளனர். வெறும் 8 பேர் மட்டுமே அரசியலைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். 297 எம்பிக்களில் 271 பேர் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்.






