என் மலர்
உலகம்

ஈரானில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து- 6 பேர் பலி
- 25-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு ஈரானின் கோகிலுயே மாகாணத்தில் இருந்து போயர் அகமது மாகாணம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த லாரியில் திடீரென பிரேக் செயலிழந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது.
இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 26 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. மேலும் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் மீதும் இந்த வாகனங்கள் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விபத்து நடந்த சாலையில் இருந்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகே அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






