search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய ராணுவம்
    X
    ரஷிய ராணுவம்

    ரஷிய ராணுவம் கைப்பற்றிய செர்னோபில் அணு உலையில் கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு

    செர்னோபில் அணு மின் உலையில் கதிர்வீச்சு அதிகரித்து இருப்பதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.


    உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷியா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

    இது குறித்து உக்ரைன் அரசு கூறும்போது, “செர்னோபில் அணு உலையை ரஷியா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன” என்று தெரிவித்தது.

    ஆனால் ரஷியா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் அணு உலையை பாதுகாக்க அதனை கைப்பற்றி உள்ளோம்” என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் செர்னோபில் அணு மின் உலையில் கதிர்வீச்சு அதிகரித்து இருப்பதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செர்னோபில் அணு உலை உள்ள மண்டலத்தில் கதிர்வீச்சு அளவு அதிகரித்து இருக்கிறது. அப்பகுதியில் காமா கதிர்வீச்சு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்து உள்ளது.

    மேலும் இது குறித்து சர்வதேச எரிசக்தி ஏஜென்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து உக்ரைன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “செர்னோபில் அணு உலை ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சென்று உள்ளது. அங்குள்ள புளுட்டோனியத்தை அணு ஆயுத குண்டுகளாக மாற்ற முடியும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானவர்களை கொல்ல முடியும். செர்னோபில் அணு உலையை ரஷியா கைப்பற்றி உள்ளதால் கடுமையான விளைவுகள் ஏற்படும். இதனால் ஏற்படும் பேரழிவுக்கு எல்லையே இல்லை” என்று தெரிவித்து உள்ளது.

    செர்னோபில் அணு உலையில் 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் 4-வது அணு உலை வெடித்து சிதறியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரகணக்கான மக்கள் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து செர்னோபில் அணு நிலையத்தை சுற்றி கதிர்வீச்சு வெளியேறாத வகையில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி செர்னோபில் அணுமின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×