search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கொடி
    X
    பாகிஸ்தான் கொடி

    பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி... கிரே பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்?

    பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பின் 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என்பதால், அந்த அமைப்பின் கிரே பட்டியலில் நீடிக்கும் என தெரிகிறது.
    பாரிஸ்:

    பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு, கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன.

    இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். 

    அவ்வகையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்திய எப்ஏடிஎப் அமைப்பு, அந்த நாட்டை அக்டோபர் மாதம் வரை கிரே பட்டியலில் வைத்து உத்தரவிட்டிருந்தது. மேலும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பதற்கான இலக்குகளையும் நிர்ணயித்திருந்தது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் ஆறு நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறி விட்டதாக எப்ஏடிஎப் தெரிவித்துள்ளது. மசூத் அசார், ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    பாகிஸ்தான் அரசு பட்டியலில் இருந்து சுமார் 4 ஆயிரம் தீவிரவாதிகள் நீக்கப்பட்டது குறித்தும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருப்பதா என்பது குறித்து அந்த அமைப்பு இந்த வாரம் முடிவு செய்யவுள்ளது. அக்டோபர் 21-23 தேதிகளில் எப்ஏடிஎப் கூட்டம் நடைபெறவுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகு பாகிஸ்தானை கிரே பட்டியலில் நீட்டிக்கும் இறுதி முடிவை எடுக்கும்.

    பயங்கரவாத நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு மொத்தம் 27 செயல் திட்ட நிபந்தனைகளை எப்ஏடிஎப் வழங்கியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை 21 ஐ நிறைவேற்றி உள்ளது. ஆனால் சில முக்கிய பணிகளில் தோல்வியடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

    தவிர, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் பாகிஸ்தானின் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்ததில் திருப்தி அடையவில்லை.

    கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு கடினமாகி விடும்.
    Next Story
    ×