என் மலர்
செய்திகள்

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீ - பலி எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு
கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். #GreeceForestFires
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி ஓடினர். எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர்.
முதல் கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர் என்றும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.
தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #GreeceForestFires
Next Story






