என் மலர்
செய்திகள்

மலிவு விலை ஸ்மார்ட்போன்: ஆயத்த பணிகளை துவங்கிய ரிலையன்ஸ் ஜியோ
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோனுடன் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவன ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜியோபோன் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இரு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தத்தை மீடியாடெக் நிறுவன விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதே விழாவில் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் மீடியாடெக் MT6739, MT6580 சிப்செட்களை பயன்படுத்தும் என்றும் தெரிவித்தது. முன்னதாக கூகுள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மீடியாடெக் உறுதி செய்திருந்தது.

மீடியாடெக் சிப்செட் கொண்ட ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு கோ போனும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மீடீயாடெக் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட MT6739 சிப்செட் டூயல் கேமரா, ஃபேஸ் அன்லாக், டூயல் 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட வசதிகளை சப்போர்ட் செய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் புதிய சிப்செட் குறைந்தபட்சம் 512 எம்பி அல்லது 1 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் சிறப்பாக இயங்கும் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனில் அத்தியாவசிய அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் பாரத் கோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இதேபோன்று ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனமும் நோக்கியா 1 பெயரில் தனது ஆண்ட்ராய்டு கோ சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ கூட்டணி அறிவிப்பு மட்டுமின்றி மீடியாடெக் நிறுவனத்தின் சென்சியோ MT6381- அந்நிறுவனத்தின் முதல் பயோசென்சார் மாட்யூல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பயோசென்சார் மாட்யூல் இந்திய மருத்துவ தேவைக்கு ஏற்ற தகவல்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாட்யூல் இதய துடிப்பு சார்ந்த விவரங்கள், ரத்த அழுத்தம் சார்ந்த விவரங்கள், ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை 60 நொடிகளில் வழங்கும் திறன் கொண்டது.
Next Story






