என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழின் காவலர்கள்போல பேசும் திமுக எஸ்ஐ தேர்வில் ஏன் ஒரு கேள்விக்கூட தமிழில் கேட்கவில்லை? - இ.பி.எஸ்!
    X

    'தமிழின் காவலர்கள்போல பேசும் திமுக எஸ்ஐ தேர்வில் ஏன் ஒரு கேள்விக்கூட தமிழில் கேட்கவில்லை'? - இ.பி.எஸ்!

    • "3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்" என பொய் வாக்குறுதி
    • இன்னும் இரண்டரை மாதங்களில் அதிமுக ஆட்சி அமையும்.

    தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 2025 டிசம்பர் 21-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வின் பிரிவு 'பி'-ல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ் மொழி வினாக்கள் ஒருமுறை கூட கேட்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டிருந்ததாகவும் கூறியிருந்தனர். இந்த மனு தொடர்பான விசாரணையின்போது பாடத்திட்டத்தில் தமிழ் வினாக்கள் இடம்பெறும் என்று கூறிவிட்டு, தேர்வில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்? என்று நீதிபதி பி. புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

    "காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்கு தேர்வு முடிவை வெளியிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    இவ்வழக்கு விசாரணையின் போது, "தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் படித்து தயார்படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி?" என்று உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

    மூச்சுக்கு முன்னூறு முறை தங்களை தமிழின் காவலர்கள் போல, தமிழுக்கே தாங்கள் மட்டும் தான் Authority போல பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூட தமிழில் கேட்கவில்லை? "எங்கும் தமிழ்" என்பது வாயளவுக் கொள்கை தானா? "எதற்கு தமிழ்?" என்பது தான் திமுக அரசின் செயல் கொள்கையா?

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, கூட்டுறவுத்துறை தேர்வு, எஸ்.ஐ. தேர்வு என தொடர்ந்து அரசுப்பணி தேர்வுகளில் ஏதேனும் ஒரு குளறுபடி நடக்கிறதே... இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று சொல்லி கடந்துவிட முடியுமா? அதுவும், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன ஊழலுக்கு பிறகு, "வாங்கியதை" எல்லாம் "திருப்பி கொடுக்காமல்" இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி தேர்வுகளில் குளறுபடிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழாமல் இல்லை.

    "3.50 லட்சம் அரசுப்பணிகளில் தமிழக இளைஞர்களை அமர்த்துவோம்" என பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தேர்வு குளறுபடிகளால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தோடு, கனவுகளோடு விளையாடும் விடியா திமுக அரசை விரட்டி அடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

    இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள எங்களின் அதிமுக தலைமையிலான அரசு, பல்வேறு அரசுப்பணிகளுக்கான தேர்வுகளை முறையாக நடத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்களை அரசுப்பணிகளில் அமர்த்தி அழகுபார்க்கும் அரசாகத் திகழும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×