என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் கிராம திருவிழா- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
- நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம்.
- இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செம்பொழில் அமைப்பு சார்பில் சென்னையில் ஒரு கிராமத் திருவிழா நடைபெறுகிறது.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த கிராமத்து திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உள்ளே இடம்பெற்றுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார். இன்று தொடங்கிய இந்த கிராமத்து திருவிழா வரும் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண்முன் காட்சிப்படுத்தும் விதமாக 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு இன்று மற்றும் நாளை நுழைவுக் கட்டணமாக ரூ.50, 23 மற்றும் 24-ந்தேதிகளில் ரூ. 150 வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திருவிழா நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம், எந்திரத்தனமான வாழ்க்கையில் பழைய விஷயங்களை நாம் மறந்து கொண்டிருக்கும் பொழுது அதை நினைவுபடுத்தும் விதமாகவும் சிக்னலில் கூட நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தலைமுறை இளைப்பாறும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும் முதலமைச்சர் கீழடி மூலம் பல்வேறு ஆய்வுகள் நடத்தி நம் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். நாம் யார் என்பதை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






