என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புத்தகம் எழுதாத காமராசர் நூலகம் திறந்தார்- வைரமுத்து புகழாரம்
- கையில் காசு வைத்துக்கொள்ளாத காமராசர் ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார்...
- கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும் காந்தி காணாத துறவறம் பூண்டார்....
சென்னை :
தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
படிக்காத காமராசர்
பள்ளிகள் செய்தார்
வீடுகட்டாத காமராசர்
அணை கட்டினார்
புத்தகம் எழுதாத காமராசர்
நூலகம் திறந்தார்
கையில் காசு
வைத்துக்கொள்ளாத காமராசர்
ஏழைத் தமிழர்களை
ஈட்டச் செய்தார்
மற்றவர்க்கு நாற்காலி தந்து
தன் பதவி தான்துறந்தார்
கருப்பு காந்தி
என்று அழைக்கப்பட்டாலும்
காந்தி காணாத
துறவறம் பூண்டார்
காமராசர் நினைக்கப்பட்டால்
அறத்தின் சுவாசம்
அறுந்து விடவில்லை
என்று பொருள்
காமராசர் மறக்கப்பட்டால்
மழையே தண்ணீரை
மறந்துவிட்டது என்று பொருள்
நான் உங்களை
நினைக்கிறேன் ஐயா
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.






