என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தகுதி நீக்க மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல்: உதயநிதி ஸ்டாலின்
    X

    தகுதி நீக்க மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல்: உதயநிதி ஸ்டாலின்

    • சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள்.
    • அந்த மசோதா இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முக்கியமான முழக்கம் மாநில சுயாட்சியாகும். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், முரசொலி மாறன் என திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் மாநில சுயாட்சி முழக்கத்தைத்தான் உயர்த்தி பிடித்தார்கள்.

    ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே Coordination தான் இருக்க வேண்டுமே தவிர, subordination இருக்கக் கூடாது என்பதுதான் இதற்கான தெளிவுரை. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்படி புரிந்துகொண்ட காரணத்தால் தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 'மாநில சுயாட்சி' முழக்கத்தை கையில் எடுத்தது.

    மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை தரும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது, இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அது நடக்கும்வரை திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக வலியுறுத்திக் கொண்டே இருக்கும்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர், 1969-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, டெல்லிக்குச் சென்ற முதல் பயணத்திலேயே

    மாநில சுயாட்சி குறித்துதான் பேசினார். அதன்படி, பின்னாளில் நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 1974-ம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

    ராஜமன்னார் குழு அறிக்கையையும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்களிடமும் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுபோய் சேர்த்தார். மாநில சுயாட்சிக் கொள்கைக்கு இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டினார். அதேபோல், மாநில சுயாட்சிக் கோரிக்கை என்பதையே தவறு, பிரிவினை என்று சிலர் நம்மைப் பார்த்து விமர்சித்தார்கள்.

    அவர்களுக்கு பதில் சொல்வதுபோல், கலைஞர் அவர்கள் ஒரு முழக்கத்தை அறிவித்தார்கள். அது தான், "மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி" என்கின்ற முழக்கம். அந்த முழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதனால்தான் முதலமைச்சர், ஒன்றிய -மாநில அரசுகளுக்கு இருக்கின்ற உறவு குறித்து ஆராய High Level committee to study union-state relations என்கின்ற உயர்நிலை குழுவினை இன்றைக்கு அமைத்துள்ளார்.

    ஒன்றிய அரசு - மாநில அரசின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவருக்கே உரிய பாணியில் ஒரு உதாரணத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் இங்கே நினைவுகூர விரும்புகின்றேன். "ஒரு கடிகாரத்தினுடைய முட்களில் மணிமுள் முதன்மையானது என்றாலும், நிமிடமுள் பேரளவு இயங்கினால் தான், அந்த மணிமுள் சிறிதளவு இயங்கும். அதே மாதிரி, மக்களோடு நெருக்கமாக இருக்கக்கூடிய மாநில அரசு பேரளவு இயங்க வேண்டும். மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவோடு இயங்க வேண்டும்" என்று அருமையாக சொன்னார்.

    ஆனால், இப்போது ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்றால், அதிகாரத்தை மேலும், மேலும் குவித்து வைத்துக் கொண்டு,

    இந்தியா என்கின்ற கடிகாரத்தில் மணிமுள் மட்டும் இருந்தால் போதும், நிமிடமுள்ளே தேவையில்லை என்ற அளவிற்கு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு கூட, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அவசரமாக தாக்கல் செய்தார்கள். மாநில முதலமைச்சர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ, ஒரு குற்றத்தைச் சுமத்தி, 30 நாட்கள் அவர்களை காவலில் வைத்து விட்டால் போதும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களாக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் நீக்கலாம் என்ற மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

    இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு பகிரங்க மிரட்டல். அந்த மசோதா சட்டமாவதை முதலமைச்சர் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் மாநில பட்டியலில் உள்ள அதிகாரங்களை எல்லாம் Concurrent Listக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, மாநிலப் பட்டியலில் உள்ள கல்வியை, கல்வி உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க முயற்சிக்கின்றார்கள்.

    கல்வி தொடர்பாக, மாநில சட்டமன்றங்களை புறக்கணித்து விட்டு, ஒன்றிய அரசே தன்னுடைய சட்டங்களை இயற்றி வருகின்றது.

    அதை எதிர்த்துதான் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் உரிமைக்குரலை எழுப்பி வருகின்றார்கள்.

    அதற்கான தொடக்கமாகத்தான், மாநிலக் கல்விக்கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். ஒன்றிய அரசினுடைய நேசனல் எஜிகேசன் பாலிசி, நியூ எஜிகேசன் பாலிசி என்.ஈ.பி யை முதலமைச்சர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தார். ஒன்றிய அமைச்சர் அந்த என்.ஈ.பி யை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாயை விடுவிக்க முடியும் என்று சொன்னார்.

    ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டிற்குள்ள என்னென்ன வரும். குலக்கல்வி வரும், அதாவது அப்பாவும், அம்மாவும் என்ன வேலை செய்கின்றார்களோ, அப்பாவும், தாத்தாவும் என்ன வேலை பார்க்கின்றார்களோ, அதே தொழிலை நாமும் செய்ய வேண்டி வரும் என்ற அந்தக் கொள்கையை கொண்டு வர பார்க்கின்றார்கள்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் 2,500 கோடி ரூபாய் கொடுப்போம். அதன் மூலமாக குறுக்கு வழியில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டிற்குள் நுழைக்க பார்க்கின்றார்கள்.

    முதலமைச்சர் மிகத் தெளிவாக எதிர்த்து சொன்னார். என்.ஈ.பி யை ஏற்றுக் கொண்டால்தான் 2,500 கோடி ரூபாயை கொடுப்பேன் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஒன்றிய அரசு நீங்கள் 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்த காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று எதிர்த்தார்.

    இதனால் மாநில அரசுக்கு பல்வேறு வழிகளில் கடும் நெருக்கடி எற்பட்டது. வருமானவரி, சுங்கவரி, நிறுவன வரி, இப்போது GST என்று அனைத்து வளமான வரிகளையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. மாநிலங்களை நிதிக்காக கையேந்த வைக்கும் அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.

    Delimitation என்று இப்போது கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வேலையையும் ஒன்றிய அரசு செய்து வருகின்றது.

    ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு இருக்கின்றன. ஓட்டுத்திருட்டு என்பது இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இன்றைக்கு இருக்கின்றது.

    எதிர்த்து கேள்வி கேட்கும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை தர ஒன்றிய அரசு மறுக்கின்றது. இதையெல்லாம் மீறிதான், மாநில உரிமைகளை நாம் நிலைநாட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டே, தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில் இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக முதலமைச்சர் மாற்றிக்காட்டி இருக்கின்றார்.

    இந்த கருத்தரங்கம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக நிச்சயமாக அமையும் என தெரிவித்தார்.

    Next Story
    ×