என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓரணியில் தமிழ்நாடு: ஜூலை 1ஆம் தேதி திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறார் மு.க. ஸ்டாலின்
- ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.
- ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
'ஒரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.
வரக்கூடிய ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.
அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பேரணியாகச் சென்று இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க இருக்கிறோம்.
அதை தொடர்ந்து ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப துறை முகவர்கள், மற்ற அணிகளாக இளைஞர் அணி, மகளிரணி போன்றவற்றின் நிர்வாகிகள், கிளை கழகத்துடைய நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்-களிலும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிடம் அமர்ந்து, அங்கே இருக்கும் வாக்காளர் பெருமக்களில் 30% நம்முடைய கழகத்தில் இணையகூடிய வகையில் அரசியல் பணியாற்றச் சொல்லியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அத்தனை வாக்காளர்களையும் சந்தித்து மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய அழைப்பு விடுக்கப்போகிறோம். இதன் இன்னொருகட்டமாக, ஏறத்தாழ 2 கோடி பேரை நமது கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நமது கழகத்தின் முக்கிய திட்டங்களை விளக்கி, இந்த நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை அவர்கள் இடத்தில் எடுத்து சொல்லி, டிஜிட்டலாக அவர்கள் ஒரு செயலியின் மூலமாகவும், ஒரு படிவம் மூலமாகவும் அவர்களை இணைக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லும் அளவில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற இருக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் எந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலும் மதங்களையோ, சாதிகளையோ அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப்போதும் ஒரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.
தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிற போது, அது ஒரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழ்நாட்டிற்குரிய இயற்கையான பண்புக்கூறு என்பதை மனதில் வைத்து, இந்த 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் அவர்கள் 1 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இவ்வாறு தெரிவித்தனர்.






