

சூலூர்:
கோவை சூலூர் அருகே காசிகவுண்டன்புதூர் பகுதி உள்ளது. வடமாநில பெண் இங்குள்ள தனியார் உணவு நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு ஒடிசாவை சேர்ந்த லம்போதர் மகிந்தா என்பவர் தனது 4 பிள்ளைகளுடன் வேலை செய்கிறார். இவரது 3-வது மகள் மீத்து மகிந்தா(வயது18).
இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த அஜித் (20) என்ற வாலிபருடன் மீத்து மகிந்தாவுக்கு நிச்சயமானது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் திருமண ஏற்பாடுகள் விறு, விறுப்பாக நடந்து வந்தன.
இந்த நிலையில் மீத்து மகிந்தா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீத்து மகிந்தாவை மீட்டு பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மீத்து மகிந்தாவும், இதே கம்பெனியில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த பப்லு(20) என்ப வரும் காதலித்து வந்தனர். கடந்த ஒராண்டுக்கு முன்பு பப்லு தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் தான் மீத்துவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை ஊருக்கு சென்ற முன்னாள் காதலன் பப்லு அறிந்து கொண்டார். அவர், கடந்த 15-ந் தேதி மீத்துவை திருமணம் செய்ய இருந்த அஜித்தின் செல்போனுக்கு, புதுப்பெண் மீத்துவுடன் தான் இருந்த புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அஜித், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் மீத்துவுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. வீட்டில் இருந்த நீத்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.