என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடிய விடிய சிவனை வழிபட்ட பக்தர்கள்:கோவில்களில் ஒலித்த ஓம் நமசிவாய கோஷம்
- அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
- சிவனை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
சென்னை:
மகா சிவராத்திரி தினத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பக்தர்கள் காலையில் நீராடிய பிறகு விரதம் மேற்கொள்வார்கள். விரத காலத்தில் சிவபெருமான் நாமத்தை இடைவிடாமல் உச்சரித்து வருவதுடன் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். பழங்கள், இனிப்புகள், பால் போன்ற நைவேத்யங்களை சிவபெருமானுக்கு பக்தியுடன் படைத்து வழிபடுவார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், புரசை கங்காதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் சிவபெருமானை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பால், தயிர், பழங்கள், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றன.
ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதங்களும் விநியோகம் செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தீபாராதனைகளின் போது பக்தர்கள் உற்சாகத்துடன் ஓம் நமசிவாய கோஷம் எழுப்பினர்.
இதேபோல், இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலமான கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடுகள் விமர்சையாக நடந்தன.






