என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணியை சந்திக்க போவதில்லை - ராமதாஸ் அதிரடி பேட்டி
- முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் இன்று காலையில் சென்னை புறப்பட்டு வந்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் டிரிப்டு உட் கார்டன் பகுதியில் டாக்டர் ராம தாசின் மகள் ஸ்ரீகாந்தி வீடு உள்ளது. காலையில் மகள் வீட்டுக்கு சென்ற ராமதாஸ் அங்கேயே முகாமிட்டு உள்ளார்.
இந்த தெருவுக்கு பக்கத்திலேயே ஷியாமளா கார்டன் பகுதியில் தான் டாக்டர் அன்புமணியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
ஏற்கனவே தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி சந்திப்பின்போது மகள் ஸ்ரீகாந்தியும் உடன் இருந்து சமரசம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதும் இருவரையும் சந்திக்க வைத்து சமாதான முயற்சியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் இருந்து தைலாபுரம் போய் வர நேரம் அதிகம் ஆகிறது. எனவே சென்னையிலேயே முக்கிய பிரமுகர்களை சந்தித்து அரசியல் நிலவரம் தொடர்பாக பேச ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. தரப்பில் எம்.பி. ஒருவர் டாக்டர் ராமதாசை தைலாபுரத்தில் சந்தித்து பேசி உள்ளார்.
தி.மு.க. தரப்பிலும் மூத்த எம்.பி. ஒருவர் டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அன்புமணியுடனான கருத்து மோதலால் பா.ம.க. விற்கு எந்த பின்னடைவும் இல்லை. முகுந்தன் பொறுப்புகளை விரும்பவில்லை. தொழில் செய்வதில் தான் ஆர்வமாக உள்ளார். சென்னையில் அன்புமணியை சந்திக்க போவதில்லை.
அமித்ஷா வருவது பற்றி எனக்கு தெரியாது. பா.ஜ.க. வுடன் கூட்டணி குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






