என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈஷாவில் பொங்கல் திருவிழா: கவனம் ஈர்த்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்
    X

    ஈஷாவில் பொங்கல் திருவிழா: கவனம் ஈர்த்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்

    • ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்களின் பங்கேற்போடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.

    ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் 'பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா' நேற்றும் இன்றும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று (16/01/2026) நடைபெற்ற நாட்டு மாடுகளின் கண்காட்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்து சுழற்றிய சிலம்பம் ஆகிவை பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

    ஈஷாவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்களின் பங்கேற்போடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவைச் சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    இயற்கை விவசாயத்தில் அத்தியாவசியமானதாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.

    முன்னதாக வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.

    சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷாவில் வெளிநாட்டவர் உட்பட அனைத்து தன்னார்வலர்களுக்கும் சிலம்பக்கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் கோசாலையில் 700-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து, மாலையில் கோவையைச் சேர்ந்த 'அலமேலு மங்கம்மாள் கலைக்குழுவினரின்' கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது. பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தனர்.

    Next Story
    ×