என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை விமான நிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும்- 2 வாரம் கெடு
- அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டு மனை வழங்குவதற்கு கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும்.
- மனுதாரர்களுக்கு வீடு கட்டித்தர உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
மதுரை:
மதுரை விமானநிலையத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் இருந்து மக் கள் 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த சந்திரா உள்ளிட்ட 130 பேர், மதுரை ஐகோர்ட்டில் 2024-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதியில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடும் வழங்கினார்கள். ஆனால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு நடவடிக்கையை எடுப்பது அரசின் கடமை.
இதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே எங்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சின்ன உடைப்பு மக்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் 2008-ம் ஆண்டிலேயே விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி, பயனாளிகளுக்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டுவிட்டன. தற்போது 64 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மதுரை விமானநிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து சின்ன உடைப்பு மக்கள் (அதாவது இந்த வழக்கு தொடர்ந்தவர்கள்) 2 வாரத்தில் வெளியேற வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களை வெளியேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ஏற்கனவே அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டு மனை வழங்குவதற்கு கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் மனுதாரர்களுக்கு வீடு கட்டித்தர உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






