

கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
புட்டபர்த்திக்கு சென்றதால் கோவை விவசாயிகள் மாநாட்டிற்கு வருகைதர ஒரு மணி நேரம் தாமதமானது.
தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
விவசாயிகள் துண்டை சுழற்றியபோது பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
கோவையின் எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று குடியரசு துணை தலைவராக நம்மை வழிநடத்துகிறார்.
இயற்கை விவசாயம் என்பது விசேஷமான ஒன்று, எனது இதயத்திற்கு நெருக்கமானது. பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர்.
கோவை மாநாட்டிற்கு வராமல் போயிருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்.
இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக விவசாயிகள் பேசியதை புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் உணர முடிந்தது. எதிர்காலத்தில் வேளாண்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதை நாம் காணவிருக்கிறேன.
இவ்வாறு அவர் கூறினார்.