என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள் - முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
- மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
- சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம்.
தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி.சி.டி.என்.எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சி.எஸ்.ஆர்.), முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) மற்றும் முதல் நிலை விசாரணை ஆகியவைகளைப் பதிவு செய்ய இயலும்.
மேலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவைகளை ஆன்லைனில் உடனடியாக நீதிமன்றத்துக்கும் அனுப்ப முடியும். பொதுமக்கள் ஆன்லைனில் புகாரினைப் பதிவு செய்தல், சமுதாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆன்லைன் புகார் ஆகியவற்றின் தற்போதைய நிலையை இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம். கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை கூட இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். இந்த புதிய மென்பொருள் சேவையை போன்று டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு என்ற அமைப்பும் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த 2 புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.






