என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- மு.க.ஸ்டாலின்
    X

    என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- மு.க.ஸ்டாலின்

    • படிப்புதான் நமக்கு கடைசி வரை துணை நிற்கும்.
    • கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி, தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அனிதா அச்சீவர்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தவுடன் என்னுடைய களைப்பெல்லாம் போய் உற்சாகம் வரக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்து உள்ளது.

    உங்கள் முகத்தில் தோன்றக் கூடிய மகிழ்ச்சியை பார்க்கும்போது இன்னும் நான் என்னுடைய கடமையை வேகமாக நிறைவேற்றிட வேண்டும்.

    இங்கே கூட அனிதா அச்சீவர்ஸ் மூலம் பலன் பெற்றிருக்கக்கூடிய 2 சகோதரிகள் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னார்கள்.

    இன்னும் செய்ய வேண்டும். மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் நீங்கள் இன்னும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் நிச்சயமாக உறுதியாக சொல்கிறேன். என்னுடைய உடலில் உயிர் இருக்கிற வரையிலே, தலைவர் கலைஞர் கற்றுத் தந்திருக்கக் கூடிய அந்த உழைப்பு எனது உதிரத்திலே இருக்கிற வரையில் நிச்சயமாக, உறுதியாக, நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

    என்னமோ தெரியவில்லை. கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிட்டால் இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது.

    1860 பேருக்கு கண்ணாடி வழங்கி அதிலும் 2 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கண் மருத்துவமனையில் தொடர்ந்து வழங்கி இன்றுடன் சேர்த்து 9,123 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது.

    அதே போல் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை 126 மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், 356 பெண்களுக்கு தையல் எந்திரங்களும் வழங்கி இருக்கிறோம்.

    உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்க கூடிய பயிற்சி ஒரு சிறிய துவக்கம் தான்.

    இந்த பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடிய, ஆனால் அதே பாதையில் வெற்றி நடை போட வேண்டும் என்றால், அதை தொடர்ந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் குறைந்து விடக் கூடாது.

    இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் வேலைச் சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்து வருகிறது. அதற்கேற்ற மாதிரி நீங்களும் 'அப்-டேட்' ஆகி வர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.

    இன்றைக்கு இணையம் முழுக்க அறிவுத் தகவல் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து அந்த திறமையை மேலும் மேலும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    நிறைய ஆன்லைன் படிப்பு இருக்கிறது. எது உங்களுக்கு வசதியாக இருக்குமோ அதை தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

    படித்து விட்டோம். வேலை கிடைத்து விடும் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை தொடருங்கள். படிப்புதான் நமக்கு கடைசி வரை துணை நிற்கும்.

    அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய, கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    எனவே எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அதை இந்த அரசு செய்யும். உங்களுக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.

    அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது.

    எனவே தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த கல்வி நிச்சயமாக இருக்கிறது. எனவே உங்கள் இல்லத்தில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×