என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மு.க.முத்து மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்
    X

    மு.க.முத்து மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்

    • சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.
    • மு.க. முத்து அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடம் பதித்தவர்.

    கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் - தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

    தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.

    இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மு.க.முத்து அவர்களின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், தி.மு.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்து உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

    மு.க. முத்து அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் திறம்பட நடித்தவர். தொடர்ந்து அவர் நடிக்கவில்லை என்றாலும் திரைத்துறை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தார். மிகவும் அமைதியானவர், பழகுவதற்கு இனியவர்.

    அன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, தனது சகோதரனை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளுக்கும் மு.க.முத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தி.மு.க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

    மு.க. முத்து தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க. முத்து. பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.

    அவரது மறைவு அவரது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி.மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை பாடகருமான மு.க.முத்து திரைத்துறையில் சில காலங்கள் இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்தவர். நாடகங்கள் மூலமாக திராவிட கழகத்திற்கு பெரும் தொண்டாற்றினார். திரைத்துறையில் 1970 ஆம் ஆண்டு நுழைந்து பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து மு.க.முத்து தனது சொந்தக் குரலில் பல்வேறு பாடல்களில் பாடி புகழ்பெற்றவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழக மத்தியிலும், திரையுலகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×