மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது- அமைச்சர் பெரியசாமி

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது- அமைச்சர் பெரியசாமி
Published on

சென்னை:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை விக்ஷித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று ஒன்றிய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலை வாய்ப்பு, ஒன்றிய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள்.

இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி கள்ள மவுனம் காக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com